தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை வருகிற அக்டோபர் மாதம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் வருகிற அக்டோபர் மாதம் முதல் வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தப்பட இருக்கிறது.
இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (எச்.யு.ஐ.டி.) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'பி.ஐ.எஸ்.' 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.ஐ.எஸ். அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது.
2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விருப்பத்தின் அடிப்படையில் இருந்த இந்த திட்டத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி எச்.யு.ஐ.டி. இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, 'SILVER' என்ற வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் இடம்பெறும். இதனை 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கலாம்.
ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் தூய்மை உத்தரவாதத்தை வழங்கி சந்தைக்கு அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.
பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் (பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை) விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான நகைக் கடைகள் 92.5 சதவீத ஸ்டெர்லிங் வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.