செய்திகள்

கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்துவோம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ஸ்டிரைக்கை தீவிரப்படுத்த முடிவு செய்திருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.#TNTransportstrike #Busstrike #MTCstrike

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் நேற்று இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.  பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து முடங்கி உள்ளது. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டும் பேருந்துகளை இயக்குகின்றனர்.

போராடும் தொழிற்சங்கங்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும், தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள் மூலம் பேருந்து  சேவையை தொடர முடிவு எடுத்திருப்பதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், போராட்டம் நடத்தும் தொழிற்சங்க நிர்வாகிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பிறகு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 10 சதவீத பேருந்துகள்தான் தற்போது இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு வருந்துகிறோம். எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

தற்போது 17 தொழிற்சங்கங்கள் எங்களுடன் இருக்கின்றன. அரசு எங்களுக்கு 7000 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளது.

எனவே, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவேண்டும். இந்த ஒப்பந்தம் சட்டப்படியானது அல்ல. தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது தவறு. பொதுமக்களின் உயிரோடு அரசு விளையாடக் கூடாது.

SCROLL FOR NEXT