செய்திகள்

3-வது நாளாக நீடிக்கும் பஸ் ஸ்டிரைக்: ஐகோர்ட் தடையை மீறி தொழிலாளர்கள் போராட்டம்

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஐகோர்ட் தடையை மீறி இன்றும் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். #TNTransportstrike #Busstrike #HCorder

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. 

இதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் இயங்கவில்லை. பஸ்கள் திடீரென்று ஓடாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டதால் அவற்றில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ் கிடைக்காமல் பலர் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க ஆரம்பித்தனர். 

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால், பணிக்கு செல்வோர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஐகோர்ட் தடை விதித்ததுடன், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவையும் மீறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TNTransportstrike #Busstrike #HCorder #tamilnews