செய்திகள்

தினக்கூலி ஓட்டுநர்களுக்கு 436 ரூபாய், கண்டக்டர்களுக்கு 429 ரூபாய் சம்பளம்

பஸ் ஸ்டிரைக்கினால் பேருந்துகளை ஓட்ட தினக்கூலி தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தினக்கூலி ஓட்டுநர்களுக்கு 436 ரூபாய், கண்டக்டர்களுக்கு 429 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருவள்ளூர்:

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. பணிக்குத் திரும்பும்படி ஐகோர்ட் உத்தரவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 14 சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக பொதுமக்கள் இன்றும் கடும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் மூலம் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதையடுத்து அனைத்து பணிமனைகளிலும் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தினக்கூலி டிரைவர், கண்டக்டர்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தினக்கூலி ஓட்டுனர்களுக்கு 436 ரூபாயும்,  கண்டக்டர்களுக்கு 429 ரூபாயும் சம்பளமாக நிர்ணயித்துள்ளனர். #tamilnews