திருவையாறு:
தஞ்சை அருகே சின்னகண்டியூர் கிராமம் கல்யாணபுரம் 1-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் கார்த்திக் (வயது 25) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் விஜயகுமார் (38). ஏ.சி. மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் இன்று காலை 10-30 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சின்ன கண்டியூரில் இருந்து தஞ்சை நோக்கி வந்தனர்.
அவர்கள் திருவையாறை அடுத்த அம்மன்பேட்டை மெயின் ரோட்டில் சென்ற போது தஞ்சையில் இருந்து ஏலாக்குறிச்சி செல்லும் அரசு பஸ் வந்தது.
அப்போது திடீரென அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதின. இதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக், விஜயகுமார் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நடுகாவேரி போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான விஜயகுமாருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். கார்த்திக்குக்கு இன்னும் திருமணமாகவில்லை.