எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் இன்று காலை ஒரு தனியார் பேருந்து கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை விளாத்திகுளத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பவர் ஓட்டிசென்றார். பஸ் மதுரை-தூத்துக்குடி நாற்கர சாலை எட்டயபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது வேகத்தடையில் நிலைதடுமாறி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் நாகலாபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் (32), விளாத்திகுளம் குறிஞ்சிநகரைச் சேர்ந்த முருகன் மனைவி அவ்வை (55), சின்னவநாயக்கன்பட்டி யை சேர்ந்த தயாநிதி (23), விளாத்தி குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரி, கமலாபுரத்தைச் சேர்ந்த சண்முக லெட்சுமி (54) மற்றும் பிள்ளையாநத்தத்தைச் சேர்ந்த யோகவைஷ்ணவி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டயபுரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சேர்த்து உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார், தலைமை காவலர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.