செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே பயணிகள் நிழற்குடை மீது பஸ் மோதல்- 19 பயணிகள் படுகாயம்

குறிஞ்சிப்பாடி அருகே பயணிகள் நிழற்குடை மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

குறிஞ்சிப்பாடி:

கடலூரில் இருந்து நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று விருத்தாசலம் புறப்பட்டது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை பஸ்நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று வேகமாக வந்தது.

அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் அந்த பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை மீது மோதியது. பயணிகளின் நிழற்குடை இடிந்து கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கமலா(வயது 35), சுந்தரமூர்த்தி(52), ராஜேந்திரன்(55), விஜயா(42) உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் படுகாய மடைந்த 19 பேரை மீட்டு குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

SCROLL FOR NEXT