திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பஸ் ஒன்று நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் முண்டூர் பகுதியில் சென்றபோது பச்சைப் பாறையில் இருந்து பாலக்காடு நோக்கி திருமண கோஷ்டி ஒன்றை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்தது.
எதிர்பாராதவிதமாக அந்த வேன் மீது அரசு பஸ் உரசியது. ஆனாலும் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றார். இதனால் அந்த வேனின் டிரைவர் அரசு பஸ்சை விரட்டிச்சென்று மடக்கினார். உடனே அந்த வேனில் பயணம் செய்த அனீஸ், திலீப், தினேஷ் ஆகிய 3 வாலிபர்களும் அந்த பஸ்சில் ஏறி டிரைவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் டிரைவர் மூக்கில் பயங்கரமாக ரத்தம் வந்தது. இதை தடுத்த ஒரு பயணியும் தாக்கப்பட்டார். ரத்தம் சொட்ட சொட்ட டிரைவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தகராறு காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னால் வாகனத்தில் வந்த சிலர் பஸ் டிரைவரை சிலர் தாக்குவதை பார்த்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பிறகு அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அந்த 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
வாலிபர்களால் தாக்கப்பட்ட அரசு பஸ் டிரைவரும், பயணியும் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #kerala