செய்திகள்

பொள்ளாச்சியில் குடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவர் கைது

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

பொள்ளாச்சி:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தது.

பஸ்சில் 70-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ்சை விஜய் என்பவர் ஓட்டினார். பஸ் காங்கயத்தில் கிளம்பியது முதலே டிரைவர் தாறுமாறாக இயக்கியுள்ளார். பல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டினார்.

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுனரை எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இயக்கியுள்ளார்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே வந்த பஸ் ராஜேஸ்வரி திடல் பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்ற அங்கலக்குறிச்சியை சேர்ந்த தனபாக்கியம்(50) என்ற பெண் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்த பஸ் டிரைவர் விஜய்க்கு தர்ம அடி கொடுத்து மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews