செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் மர்ம மரணம்

திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பஸ் கண்டக்டர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிழற்குடையின் கீழ் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.

அவரது சட்டைப்பையில் இருந்த டைரியில் இருந்த போன் நம்பரை போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் (50) என்பதும், இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றதும் தெரிய வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

பால்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். #tamilnews