செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை

வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

நெல்லை:

வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தலைநகர் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்த பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை தினம் என்பதால் அதிகமானோர் அருவிகளில் குளிக்க வந்திருந்தனர். ஆனால், தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.