செய்திகள்

தென் மாவட்டங்களில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

நெல்லை:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இதனால் 36 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்த பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதே போல, களக்காடு அருகே உள்ள தலையனையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.