இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் உள்ள உணவு விடுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவன் திருட முயன்றுள்ளான். விடுதியின் பின்புறம் உள்ள வெண்டிலேட்டர் ஓட்டை வழியாக உள்ளே நுழைய முயன்றுள்ளான். ஆனால் எதிர்பாராத விதமாக பாதியில் அவன் உடல் ஓட்டையில் சிக்கிக் கொண்டது. கடுமையாக முயற்சி செய்தும் அவனால் வெளியே வர முடியவில்லை.
7 மணி நேரமாக ஓட்டையிலேயே சிக்கி இருந்துள்ளான். அப்போது அந்த வழியாக சென்ற நபர் திருடனின் குரல் கேட்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருடனை அரைமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.
45 வயதான அந்த திருடனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் அங்குள்ள ஓட்டையில் திருடன் சிக்கி தவித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.