செய்திகள்

பாளை அருகே கட்டிட தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

பாளை அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கட்டிட தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீடான பாளை கொக்கிர குளத்துக்கு வந்து விட்டார்.

அவரை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைக்க முத்துப்பாண்டி நேற்று கொக்கிரகுளத்துக்கு வந்தார். அங்கு மனைவியை அழைத்தபோது அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த முத்துப்பாண்டி பாளையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அங்கு வைத்து திடீரென அவர் வி‌ஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.