செய்திகள்

காஷ்மீர்: மலையில் இருந்து தவறி விழுந்து பாதுகாப்புப்படை வீரர் பலி

காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பணியாற்றி வந்த பாதுகாப்பு படை வீரர் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் பணியாற்றி வந்த பாதுகாப்பு படை வீரர் மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சௌஜியான் பகுதியில் எல்லைக்கு அருகே உயரமான மலைப்பகுதியில் குர்விந்தர் சிங் வியாழக்கிழமை காலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 1,300 மீட்டர் உயரமான இடத்தில் இருந்து கால்தவறி சரிந்து, ஆழமான ஓடையில் விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார்.

குர்விந்த் சிங்கை உடனடியாக மீட்ட பாதுகாப்புப் படையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி, "குர்விந்தர் சிங்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. எல்லைப் பாதுகாப்புப் படை தீரமான ஒரு வீரரை இழந்து விட்டது” என தெரிவித்தார்.

பலியான குர்விந்தர் சிங் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சேர்ந்தவர் என்றும், அவரது உடல் விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.