செய்திகள்

இளம்பெண்ணை பழகவைத்து தகவல் பெற்ற ஐ.எஸ்.ஐ. - பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். #BSFJawan #SharingInformation #PakistanSpy

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் எல்லைப் பாதுகாப்பு படையில் 2006-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர், அச்சுதானந்த் மிஸ்ரா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ராவிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் தன்னை ராணுவ செய்திகள் சேகரிக்கும் நிருபர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இதனால் இருவர் இடையேயும் நட்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை, போலீஸ் பயிற்சி மையம் மற்றும் வீரர்களுக்கான ராணுவ பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் போன்றவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக அந்த பெண்ணிடம் மிஸ்ரா பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். பின்னர் வாட்ஸ்-அப்பில் பாகிஸ்தானில் பதிவு செய்த ஒரு போன் நம்பர் மூலம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார்.

மிஸ்ராவின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதுபற்றி மாநில தலைமை போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், “ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை மிஸ்ரா பகிர்ந்து கொண்ட பெண் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யை சேர்ந்தவர். இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.  #BSFJawan #SharingInformation #PakistanSpy