செய்திகள்

எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தானை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் கைது

பஞ்சாப் மாநிலத்தில் கவனக்குறைவு காரணமாக எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் இந்திய - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பேரியர் அவுட்போஸ்ட் அருகே இன்று பாகிஸ்தானைச் சேர்ந்த வாய்பேச இயலாத, கேட்கும் திறனில்லாத 12 வயது மாற்றுத் திறனாளி சிறுவன் எல்லையை தாண்டி இந்தியா வந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளான்.

பாகிஸ்தானின் பாரம்பரிய உடையான பைஜாமா அணிந்திருந்த அந்த சிறுவன் தனது கையில் 20 ரூபாய் பாகிஸ்தான் பணத்தையும் வைத்துள்ளான். அச்சிறுவனை கைது செய்த பாதுகாப்பு படை வீரர்கள் பின்னர் பஞ்சாப் போலீசாரிடம் அவனை ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்மாநில போலீசார் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி ஆசிரியரை வரவழைத்து அவனிடம் இருந்து விபரங்களை பெற இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தூதரக நடவடிக்கைகள் மூலம் சொந்த நாட்டிற்கு அச்சிறுவன் அனுப்பி வைக்கப்படுவான் என்றும் கூறினர்.