ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.
பிரிட்டன் நாட்டை பொருத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.
இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெராமி ஹண்ட்இடையே நேரடி போட்டி நிலவியது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள்தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்தன.
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.