செய்திகள்

கல்யாண கொண்டாட்டத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் பலி

டெல்லியில் திருமண விழா ஊர்வலத்தின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து மணமகன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

புதுடெல்லியில் உள்ள சீமாபுரி நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 23). இவர், பேருந்து முனையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை தீபக்குக்கு திருமணம் நடக்க இருந்தது. அதன்படி மணமகன் குதிரையில் அமர்ந்து இருந்தபடி ஊர்வலத்தில் வந்தார்.

அப்போது, திருமண விழா கொண்டாட்டத்தில் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு நபர் சுட ஆரம்பித்தார். இதில், தவறுதலாக குண்டு ஒன்று கண்இமைக்கும் நேரத்தில் மணமகன் தலையில் பாய்ந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து, உறவினர்கள் விரைந்து சென்று மணமகனை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை 2 மணிளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமண கொண்டாட்டங்களில் துப்பாக்கி சுடுவது வட இந்தியாவில் சம்பிரதாயமாக இருக்கும் நிலையில், இந்த கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. தடையை மீறி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.