கைது 
செய்திகள்

திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய ஓட்டல் அதிபர் கைது

திருப்பூர் அருகே மது கிடைக்காததால் சாராயம் காய்ச்சிய ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொடியம்பாளையம் நால்ரோடு பகுதியில் சாராயம் காய்ச்சபடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனால் ஊத்துக்குளி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உப்பிலியன்காட்டுத்தோடட்ம் பகுதியில் ஓட்டல் உரிமையாளர் பூவேந்தன் (43) என்பவர் சாராயம் காய்ச்சி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் பூவேந்தன் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. அதை போலீசார் அழித்தனர். ஓட்டல் உரிமையாளரான பூவேந்தன் ஊரடங்கு உத்தரவால் மது கிடைக்காமல் திண்டாடி வந்ததாகவும் இதனால் தனக்கு சொந்தமான நிலத்திலேயே சாராயம் காய்ச்சியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

 இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.