மண்ணச்சநல்லூர்:
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக இந்த கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில் கைக்குழந்தைகளுடன் வரும் பெண் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு மறைவான இடம் இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று பக்தர் ஒருவர் தாய்ப்பால் கொடுக்கும் அறை வசதியை செய்து கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா நடைபெற்றது. இணை ஆணையர் அசோக்குமார் அந்த அறையை திறந்து வைத்தார்.
விழாவில் மணியக்காரர் ரமணி மற்றும் உபயதாரர் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து அந்த அறை பெண் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது.