செய்திகள்

மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

குளியலறையில் வழுக்கி விழுந்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

மாலை மலர்

ராயபுரம்:

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ்(வயது 50). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 22-ந் தேதி வீட்டில் குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்ததில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருதயராஜ் கடந்த 24-ந் தேதி மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய டாக்டர்கள் அவருடைய குடும்பத்தாருக்கு அறிவுரை வழங்கினர். அதனை ஏற்று இருதயராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவருடைய உடலில் இருந்த இதயம், கண்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. தானமாக பெறப்பட்ட இதயம் பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு 32 நிமிடத்தில் கொண்டு சென்று வழங்கப்பட்டது.

இதற்காக போக்குவரத்தை சரி செய்து உதவிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், முதன்மை காவலர் சுரேஷ்குமார் ஆகியோரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

இருதயராஜின் மற்ற உடல் உறுப்புகள் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கே தானமாக வழங்கப்பட்டன.