செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த பிரமோஸ் ஏவுகணை என்ஜீனியரை 3 நாள் காவலில் எடுத்தது உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு

பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள என்ஜீனியரை உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது. #BrahMos #DRDO

மாலை மலர்

மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் அகர்வாலை 3 நாட்களில் காவலில் எடுக்க உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

நேகா சர்மா மற்றும் பூஜா ராஜன் என்ற பெயர்களிலான பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த கணக்குகள் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம் என விசாரணை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.