செய்திகள்

வக்கீலுக்கு படித்து முன் உதாரணமாக இருப்பேன்- புற்று நோய்க்கு தாயை இழந்த மகன் கண்ணீர் பேட்டி

சாதீய வர்கத்தை எதிர்க்க வக்கீலுக்கு படித்து முன் உதாரணமாக இருப்பேன் என்று புற்று நோய்க்கு தாயை இழந்த மகன் கண்ணீர் மல்க கூறினார்.

மாலை மலர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயா (வயது 45). அவரது கணவர் காளியப்பன் இறந்து விட்ட நிலையில் தனது மகன் மோகன்ராஜ் (15), வேல்முருகன் (13), மகள் ஈஸ்வரி (9) ஆகியோருடன் வசித்து வந்தார். வறுமை காரணமாக மோகன்ராஜ் வேலைக்கு செல்ல மற்ற 2 குழந்தைகளும் ஒட்டன்சத்திரம் தனியார் காப்பகத்தில் தங்கி படித்து வந்தனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட விஜயா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உறவினர்கள் கைவிட்டதால் மோகன்ராஜ், அவரது தம்பி வேல்முருகன், தாயின் உடலை தகனம் செய்வதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளிடம் கையேந்தி பணம் பெற்றனர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் மின் மயானத்தில் தனது தாயின் உடலை தகனம் செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயை இழந்து தவிக்கும் மோகன்ராஜ் தனது தம்பி, தங்கையுடன் ஆதரவின்றி தவிக்கிறார். அவரை தொடர்பு கொண்டபோது உருக்கமான தகவல்கள் கிடைத்தது.

மோகன்ராஜ் கூறுகையில், நான் திண்டுக்கல்லில் உள்ள டட்லி மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்தேன். 9-ம் வகுப்பு செல்லலாம் என்று முடிவு செய்த வேளையில் என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு. எனவே நான் படிப்பை நிறுத்தி விட்டு எரியோடு பகுதியில் உள்ள அழகுஅன்னை பேக்கரியில் வேலை செய்தேன். 4 மாதமாக வேலை பார்த்தேன். எனது தாய்க்கு புற்று நோய் உள்ளது என்று டாக்டர்கள் கூறினார்கள்.


உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு நோய் முற்றியதால் டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். உடனே திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தேன். அங்கு எனது அம்மா இறந்து விட்டார். இறந்த விசயத்தை உறவினர்களுக்கு தெரிவித்தேன. ஆனால் எனது அம்மாவும், அப்பாவும் கலப்பு திருமணம் செய்திருந்ததால் யாரும் எங்களை பார்க்க முன்வரவில்லை.

கடைசி நேரத்தில் எனது சித்தப்பா முருகன் வந்தார். அவரது உதவியுடன் எனது அம்மாவை திண்டுக்கல் மின் மயானத்தில் இறுதி சடங்கு செய்து தகனம் செய்தோம். எனது தம்பி தங்கையை நன்றாக படிக்க வைக்க வேண்டும். எனக்கும் படிக்க வேண்டிய ஆசை உள்ளது. சாதீய வர்க்கத்தை எதிர்க்க வக்கீலுக்கு படித்து முன் உதாரணமாக இருப்பேன் என்றார்.

மோகன்ராஜ் தம்பி வேல்முருகன் கூறுகையில், நான் ஒட்டன்சத்திரம் பழக்கனூத்து ஞானம் நினைவு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறேன். எனது தங்கை காளீஸ்வரியும் நான் படிக்கும் பள்ளியில் படிக்கிறாள். எனக்கு படிக்கனும்னு ஆசை உள்ளது. போலீஸ் அதிகாரி ஆகி நியாயமாக நடப்பேன் என்றார்.