செய்திகள்

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள ஆவிலிப்பட்டி வீரசின்னம்பட்டியை சேர்ந்த வடிவேல் மகன் செல்வமுருகன் (வயது4). வடிவேல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயாரும் இல்லாத நிலையில் செல்வமுருகன் தனது பாட்டி சரஸ்வதி பராமரிப்பில் இருந்து வந்தார்.

சரஸ்வதி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். வேலைக்கு சென்ற அவர் தனது பேரனையும் உடன் அழைத்து சென்றார். அதே பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் மூழ்கினான்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT