டெல்லி:
நதிகள் மீட்பு இயக்கத்தின் பல்வேறு அம்சங்களை முன்னெடுத்துச்செல்ல, தேசிய அளவிலான பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவை ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ளது. இக்குழுவில் சத்குரு ஜக்கிவாசு தேவ், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜித் பசாயத், பையோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மஜூம் தார்ஷா, உலக வன விலங்கு நிதியத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி ரவிசிங், நீர்வளத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்வுக்கான இந்திய அமைச்சகத்தின் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற சஷிசேகர், இந்திய விவசாய அமைச்சகத்தில் சிறு விவசாயிகள் வேளாண் தொழில் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனராக இருந்த பிரவேஷ்சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தானே நேரடியாக வாகனம் ஓட்டியபடி, 9300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 16 மாநிலங்கள் வழியாக, ஒரு மாதமாக சென்ற நதிகளுக்கான பயணத்தின் தொடர்ச்சியாக, பல்துறை நிபுணர்களின் குழுவை உருவாக்கியிருப்பதை ஜக்கிவாசு தேவ் அறிவித்தார்.
செப்டம்பர் 3-ல் தொடங்கி அக்டோபர் 2-ல் பயணம் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திரமோடியிடம், நதிகளுக்கு புத்துயிரூட்டும் செயல் திட்டவரைவின் பரிந்துரைகளை ஜக்கிவாசுதேவ் ஒப்படைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடமும், மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடமும் சமீபத்தில் இந்த பரிந்துரை புத்தகம் வழங்கப்பட்டது. தற்போது மாநில முதல்- மந்திரிகளிடமும் இந்த புத்தகம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.