செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி - ‘ஒப்பிட முடியாதவர் என புகழாரம்’

திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Sridevi

தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.  அவர் ஒரு சிறந்த நடிகை என்று தனது இரங்கல் செய்தியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது.  அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா அமைதி அடையட்டும் என நடிகை திரிஷா ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என நடிகை பிரீத்தி ஜிந்தா ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம் என நடிகை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை என நடிகை சுஷ்மிதா சென் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நேஹா தூபியா, நிம்ரத் கவுர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். #Sridevi #RIPSridevi #TamilNews

SCROLL FOR NEXT