கோப்பு படம் 
செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு 18 ஆயிரம் கனஅடி நீர்வரத்து - பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை நீடிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

மாலை மலர்

ஒகேனக்கல்:

கர்நாடக-தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இன்று 2-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இன்று 93-வது நாளாக குளிக்கவும் தடை நீடிக்கிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு 2 லட்சத்துக்கு மேல் நீர்வரத்து இருந்ததால் மெயின் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. சுவர்களும் இடிந்து விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தால் தான் ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும், அந்த சீரமைப்பு பணிகள் முடிந்தபிறகுதான் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க முடியும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.