ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. இஜாஸ் அகமது மிர் வீட்டில் கையெறி குண்டு வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ வாக இருப்பவர் இஜாஸ் அகமது மிர். இவரது வீடு ஷோபியான் மாவட்டத்தில் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை அவரது இல்லத்தில் தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகள் வீசியதாகக் கூறப்படுகிறது. வீட்டின் சுற்றுச்சுவர் மீது பட்டு கையெறி குண்டு வெடித்ததால் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கையெறி குண்டு வீசப்பட்டபோது எம்.எல்.ஏ வீட்டில் இல்லை.
இஜாஸ் அகமது மிர் தெற்கு காஷ்மீரின் வாசி தொகுதி எம் எல் ஏ என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.