செய்திகள்

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு இன்று வரும் பாரத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலத்தில் தி.மு.க.வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கட்டி போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் வசித்து வரும் டி.வி.எஸ். நகரில் உள்ள வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வசித்து வரும் டவுன் ரெயில்வே நிலையம், பாரதியார் சிலை அருகே உள்ள வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

இதை போல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா பூலாவரியில் உள்ள தன்னுடைய வீட்டில் கருப்பு கொடி கட்டினார்.

தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வ கணபதி வின்சென்ட்டில் உள்ள தனது வீட்டிலும் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.டி.எஸ். நகரில் உள்ள தனது வீட்டிலும் கருப்பு கொடி கட்டினார்கள்.

மேலும் மத்திய மாவட்டம், கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, வார்டு, சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ.க்கு சொந்தமான தடங்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். கருப்பு சட்டை அணியாதவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

திருச்சி சாலையில் உள்ள நாமக்கல் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கருப்பு கொடி கட்டினர். அதுபோல் முன்னாள் மத்திய மந்திரி காந்தி செல்வன் வீட்டிலும் கருப்பு கொடி கட்டப்பட்டது.

கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டது.

நாமக்கல் மணிக் கூண்டு அருகே நகர செயலாளர் மணிமாறன் தலைமையில் பொதுமக்களிடம் வீடுகளில் கட்டுவதற்கு கருப்பு கொடிகளை வழங்கினார்கள்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான செங்குட்டுவன் வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டது. வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.முருகன், தளி தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

மேட்டூரில் ஒரு வீட்டில் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ள காட்சி.