பிடிபி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பாஜகவினர் 
செய்திகள்

மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய பாஜகவினர் -ஸ்ரீநகரில் பரபரப்பு

ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிய பாஜகவினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் தேசியக்கொடியை ஏற்ற பாஜகவினர் முயன்றனர். பாரத மாதா வாழ்க என்ற கோஷத்துடன் வந்த பாஜகவினர், கடிகார கோபுரத்தில் (கிளாக் டவர்) தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். 

அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? என்ற விவரம் வெளியாகவில்லை. 

அதன்பின்னர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்திலும் பாஜகவினர் தேசியக்கொடியை ஏற்றினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கான கொடி மீண்டும் வரும் வரை தேசியக் கொடியை உயர்த்தமாட்டோம் என மெகபூபா முப்தி கூறிய ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.