செய்திகள்

மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க பா.ஜ.க. மும்முரம்

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் பா.ஜ.க. மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. #Meghalaya #Bjp

மாலை மலர்

ஷில்லாங்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 60 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 21 இடங்களை வென்றது. தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பா.ஜ.க 2 இடங்களிலும் வென்றன. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், மேகாலயாவில் காங்கிரசை ஆட்சி அமைக்க விட்டுவிடக் கூடாது என்பதற்கான பணிகளில் பா.ஜ.க மும்முரமாக இறங்கியுள்ளது.

இதுதொடர்பாக அசாம் மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், நாங்கள் தேசிய மக்கள் கட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். 

தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட்  சங்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மேலும், பல்வேறு சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேசி கூட்டணி அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் மேகாலயாவில் அடுத்து காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த கோவா, மணிப்பூர் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வென்றது. ஆனால், உதிரி கட்சிகளை வளைத்த பா.ஜ.க ஆட்சியமைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Meghalaya #Bjp #TamilNews