சென்னை:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலடியாக சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் சென்னையில் இன்று பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணி நடைபெற்றது. சிந்தாதிரிபேட்டையில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பதாகைகள், மோடி, அமித் ஷா புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். பாஜக பேரணியை முன்னிட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.