செய்திகள்

பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை மீறி நண்பர்களுடன் மதுகுடித்த பா.ஜனதா எம்.பி. மகன் கைது

பீகாரில் மதுவிலக்கு சட்டத்தை மீறி நண்பர்களுடன் மதுகுடித்த பா.ஜனதா எம்.பி. மகனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் மது விலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனால் அங்கு சாராயம் மற்றும் மது விற்பனையும், குடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கயா தொகுதி பா.ஜனதா எம்.பி. ஹரி மாஞ்ஜியின் மகன் ராகுல் குமார் மாஞ்ஜி நாமா கிராமத்தில் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.

அப்போது அங்கு மது விலக்கு வேட்டைக்கு வந்த போலீசார் ராகுல் குமாரையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 3 பேரும் மது குடித்து இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஹரிமாஞ்ஜி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி கூட்டணியான பா.ஜனதாவைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்டு போலீசார் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். #tamilnews

SCROLL FOR NEXT