ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த ஒரு கருத்தால் பாஜக தலைவர்கள் கொந்தளித்தனர்.
இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பேசிய ராகுக் ‘எனது பெயர் ராகுல் காந்தி. (மன்னிப்பு கேட்க) நான் ராகுல் சாவர்க்கர் அல்ல. நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கூறினார்.
ராகுல் காந்தியின் சாவர்க்கர் விமர்சனத்துக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் பதில் என்ன?
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது, ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கு பதிலடி தரும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ‘நானும் சாவர்க்கர்’ என அச்சிடப்பட்ட காவி தொப்பியுடன் வந்தனர்.