செய்திகள்

காவல் நிலையத்திற்குள் கான்ஸ்டபிளை அறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கான்ஸ்டபிளை பா.ஜ.க. எம்.எல்.ஏ. அறைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #BJPMLASlappedConstable

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் உதய் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டாவின் உறவினர் வந்துள்ளார். நள்ளிரவைத் தாண்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர், தடை செய்யப்பட்ட அறைக்குச் சென்று ஒரு நபரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கி உள்ளார். இதனை பணியில் இருந்த கான்ஸ்டபிள் சந்தோஷ் தடுத்து நிறுத்தி திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உறவினர், எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கான்ஸ்டபிளை மாறி மாறி கன்னத்தில் அறைந்தார். கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

அதன் அடிப்படையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. எம்.எல்.ஏ. அடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை கூறியுள்ளது. #BJPMLASlappedConstable

SCROLL FOR NEXT