செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம்

உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். #RamKadam #BJP

மாலை மலர்

மும்பையை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நடந்த உறியடி நிகழ்ச்சியில், இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்து ஒப்படைப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்டதன் மூலம் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராம் கதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஆதாரமற்ற தகவல்களை வைத்து இரங்கல் செய்தி வெளியிட்ட அவரை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்தனர். சிலர் கண்டனமும் தெரிவித்தனர்.