செய்திகள்

கோசாலையில் 27 பசுக்கள் உயிரிழப்பு - பா.ஜ.க. பிரமுகர் ஹரீஷ் வர்மா கைது

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு உரிமம் பெற்ற கோசாலையில் 27 பசுக்கள் தொடர்ந்து இறந்தது தொடர்பாக, அதன் உரிமையாளரான பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டம் ராஜ்புர் கிராமத்தில் பா.ஜ.க. உறுப்பினர் ஹரிஷ் வர்மாவுக்கு சொந்தமான அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலை ஒன்று இயங்கி வருகிறது. அதில் 500க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், போதிய உணவு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் கடந்த மூன்று நாட்களில் 27 பசு மாடுகள் திடீரென இறந்தன. அதற்கு மையத்தில் போதிய வசதியின்மையே காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால் தான் மாடுகள் இறந்ததாக வர்மா கூறினார். அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்த மாடுகளின் மாதிரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என கூறினர்.

இதற்கிடையில் சத்தீஸ்கர் பசு பாதுகாப்பு அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹரிஷ் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

ஹரீஷ் வர்மாவின் கோசாலையில் 300 பசுக்கள் இறந்திருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT