செய்திகள்

பாரதிய ஜனசங்க நிறுவனர் சிலை உடைப்பு- கொல்கத்தாவில் பெண் உள்பட 7 பேர் கைது

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனசங்கம் கட்சியின் நிறுவனர் சிலை சேதப்படுத்தி அவமதிக்கப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய மறுநாளே, முந்தைய ஆட்சியின்போது வைக்கப்பட்ட லெனின் சிலை அதிரடியாக அகற்றப்பட்டது. இந்த இரு கட்சிகளிடையே மோதலை உருவாக்கி உள்ள நிலையில், தமிழகத்தில் எச்.ராஜா தெரிவித்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பெரியார் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பா.ஜ.க.வுக்கு முன்னோடியான பாரதிய ஜனசங்கம் கட்சியின் நிறுவன தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அந்த சிலையின் சில பகுதிகளையும், முகத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி கருப்பு நிற சாயம் பூசி அவமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். இத்தகைய செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலை உடைப்பு குறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் ராகுல் சின்கா கூறுகையில், “இடதுசாரிகள் ஆட்சிக்காலம் முடிவடைந்ததால் அவர்களின் ஆதிக்கத்தை இவ்வாறு வெளிபடுத்தியுள்ளனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் நாட்டின் தேசிய கொள்கைகளுக்கு எதிரானவர்கள்” என கூறியுள்ளார். #tamilnews

SCROLL FOR NEXT