செய்திகள்

யானை குட்டியை தத்தெடுத்த பா.ஜனதா முன்னாள் மந்திரி

யானை குட்டியை தத்தெடுத்த பா.ஜனதா முன்னாள் மந்திரி, யானைக்கு எம்.பி.யின் பெயரை வைத்துள்ள சம்பவம் கர்நாடகா மாநிலம் பா.ஜ.க. பிரமுகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது சுற்றுலா துறை மந்திரியாக ஜனார்த்தன ரெட்டி என்பவர் இருந்தார். அவர் கர்நாடகா மாநிலம் பன்னார் கட்டா என்ற உயிரியல் பூங்காவில் இருந்து 6 மாத யானை ஒன்றை தத்தெடுத்தார்.

தற்போது பெல்லாரி தொகுதியின் எம்.பி.யும், பா.ஜ.க. பிரமுகரும், தனது உறவினருமான ஸ்ரீராமலு என்பவரது பெயரை அந்த குட்டியானைக்கு பெயர் சூட்டினார்.

நாட்டின் எம்.பி.யின் பெயரை ஒரு யானைக்கு பெயர் சூட்டியதால் தற்போது கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் பிரச்சினை கிளப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்றத்தில் பெரும் பிரச்சினை எழுப்புவதாக கூறி உள்ளனர்.

இந்த நிலையில் ஜனார்த்தனரெட்டி தத்தெடுத்த யானைக்கு ஆண்டுக்கு ரூ1.75 லட்சம் செலவிட முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று அவர் பன்னார்கட்டா வன உயிரியல் பூங்காவிற்கு சென்றார். அங்கு ஸ்ரீராமுலு யானையை பார்வையிட்டார்.

பின்னர் அதன் வருடந்திரா செலவுக்கு உண்டான ரூ.1.75 லட்சம் தொகையை பூங்கா நிர்வாகத்தினரிடம் கொடுத்தார். பின்னர் ஸ்ரீராமுலு யானையின் 10 வயதுடைய தாய் யானையும் அவர் பார்வையிட்டார்.

யானையை தொடர்ந்து ஜனார்த்தனரெட்டி அதே உயிரியல் பூங்காவில் உள்ள 3 புலிகளை அவர் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு யானைக்கு நாட்டின் எம்.பி.யின் பெயரை வைத்ததால் கர்நாடக மாநிலத்தின் உள்ள காங்கிரஸ் கட்சியினர், ஜனதா தளம் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், வனஉயிரின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் கர்நாடகா மாநிலம் பா.ஜ.க. பிரமுகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.