ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தலித் என்பதால் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பாஜகவுக்கு கவலை ஏற்பட்டதாகவும், அப்போது தலித் வாக்குகளை கவனத்தில் கொண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியதாகவும் கெலாட் கூறினார். இந்த தகவலை ஒரு கட்டுரையில் படித்ததாகவும் அவர் கூறினார்.
அசோக் கெலாட்டின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசோக் கெலாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்ததுடன், அசோக் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்த விஷயத்தை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து கெலாட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.