செய்திகள்

உ.பி. உள்ளாட்சி தேர்தல்: மேயர் வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 438 நகராட்சிகள், 202 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சி இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 3 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் அயோத்யா நகர் மற்றும் மதுரா-பிருந்தாவன் நகர் ஆகிய இரு இடங்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளன.

அதன்படி, நவம்பர் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 

மீரட்டில் கண்டா கர்டம், கோரக்பூரில் சீதாராம் ஜெய்ஸ்வால், ஆக்ராவில் நவீன் ஜெயின், அயோத்யாவில் ரிஷிகேஷ் உபாத்யாயா, கான்பூரில் பிரமீளா பாண்டே, லக்னோவில் சன்யுக்தா பாட்டியா, வாரணாசியில் மிருதுளா ஜெய்ஸ்வால், அலிகாரில் டாக்டர் ராஜீவ் அகர்வால், மதுராவில் டாக்டர் முகேஷ் ஆர்யபந்து, ஜான்சியில் ராம்தீரத் சிங்கால், மொராதாபாத்தில் வினோத் அகர்வால், சஹாரன்பூரில் சஞ்சீவ் வாலியா காஜியாபாத்தில் ஆஷா சர்மா ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என மாநில தலைவர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார். 

கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு உள்ளாட்சி தேர்தலில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.