கொஹிமா:
திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் வரும் 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.
60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான 20 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க.வின் தேசிய தேர்தல் கமிட்டி செயலாளர் ஜே.பி. நட்டா வெளியிட்டார். மீதி உள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தேர்தல்களாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்து வருகிறது. இருப்பினும் சமிபத்தில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #NagalandAssemblypolls #tamilnews