செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் முன்பு பா.ஜனதா-இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

மீனாட்சி அம்மன் கோவில் முன்பு அறநிலையத்துறையை கண்டித்து பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை:

மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்து மதுரை மக்களை மட்டுமின்றி அனைத்து பகுதி ஆன்மீக மக்களையும் கலக்கமடையச் செய்துள்ளது.

தீ விபத்துக்கு அறநிலையத்துறையின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டிய இந்து அமைப்புகள் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.

இன்று காலையும் கோவிலின் கிழக்கு கோபுரம் முன்பு பா.ஜனதா, இந்து முன்னணி அமைப்பினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர்.

ஆலயத்தை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்து ஆலயங்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் போன்ற கோ‌ஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. #tamilnews

SCROLL FOR NEXT