புதுடெல்லி:
கடந்த 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை, மாணவர்கள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு மேல் வகுப்புக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்தமுறை காரணமாக, மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இதை கைவிட வேண்டும் என்றும் 24 மாநில அரசுகள் சமீபத்தில் கேட்டுக்கொண்டன. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கட்டாய தேர்ச்சி முறையை கைவிட கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இந்த திருத்த மசோதாவை, நேற்று பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி உபேந்திர குஷ்வாகா தாக்கல் செய்தார்.
இதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளின் ஆண்டு இறுதித்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களை மாநில அரசுகள் ‘பெயில்’ ஆக்கலாம். அதற்கு முன்பு, மறுதேர்வு எழுத அம்மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.