செய்திகள்

தூத்துக்குடியில் பைக் மோதி விபத்து: மருத்துவகல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம்

பைக் விபத்தில் மருத்துவகல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாலை மலர்

தூத்துக்குடி:

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாய்குமார். இவர் தூத்துகுடி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராஜகனி என்பவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர்கள் 2 பேரும் கல்லூரி முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 3-ம் மைல் அருகே பெட்ரோல் நிரப்பிவிட்டு அதே பகுதியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவர் ஓட்டி வந்த பைக், சாய்குமார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சாய்குமாருக்கு தலையில் பலந்த காயம் ஏற்பட்டது. ராஜகனிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.