பாட்னா:
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உபி. மற்றும் கர்நாடகாவில் நேற்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஷ்டிரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை சட்டதிருத்தம் அரசியலமைப்பு எதிரானது என்றும், இது பாஜகவின் பிளவுபடுத்தும் தன்மையை காட்டுவதாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.