லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவிற்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்தியா தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சீனாவுக்கு பொருளாதார ரீதியாக கடுமையான பதிலடியை கொடுக்க வேண்டும் என்றும், சீனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சீனாவுக்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே நடைபெற்றன.
சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும், ஓட்டல்களில் சீன உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.