பூபிந்தர் சிங் ஹூடா 
செய்திகள்

அரியானா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பூபிந்தர் சிங் ஹூடா நியமனம்

அரியானா மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் டெல்லி தலைமை அறிவித்துள்ளது.

மாலை மலர்

90 இடங்களை கொண்ட அரியானா  சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் 31 இடங்களை கைப்பற்றியது.

ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாஜகவால் எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது.
 
மேலும், தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றிஉள்ளது. இதற்கிடையே, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 5 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர்.

திடீர் திருப்பமாக 10 தொகுதிகளில் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியின் துணையுடன் பாஜக அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க முன்வந்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்துப் பேசினார்.

இதைதொடர்ந்து, கவர்னர் சத்யடியோ நரைன் ஆர்யா கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மந்திரி மனோகர் லால் கத்தார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மற்றும் இதர மந்திரிகளுக்கு பதவி பிரமாணமும் காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

31 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சியாக செயல்படவுள்ள நிலையில்
எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்வு செய்வது? என்பது தொடர்பாக அரியானா மாநில காங்கிரசாரால் முடிவுகாண இயலாத இழுபறி நீடித்தது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.