பெங்களூர்:
கேரளாவை சேர்ந்தவர்கள் ஷபீக் மற்றும் திவ்யா. இவர்கள் இரண்டு பேரும் வேலை காரணமாக இன்று பெங்களூர் வந்தனர். பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலுக்குச் சென்ற இருவரும் அறை வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அறை கொடுக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துள்ளது.
இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அறை கொடுக்க மறுத்ததாக ஷபீக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகத்திலும் செய்தி வெளியானது.
இதுபற்றி ஓட்டல் நிர்வாகம் கூறும்போது, “அவர்கள் அடையாள சான்றிதழ்கள் அவர்களிடம் இல்லாததால் அறை கொடுக்கவில்லை” என தெரிவித்தது.
பின்னர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் ஓட்டல் நிர்வாகம் தரப்பிலோ, அறை கேட்டு வந்த ஜோடி தரப்பிலோ எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.